தமிழ்மக்கள் மீதான சிறிலங்காப் படையினரின் கொலைப்படலங்களும் கொடூரங்களும் ஆதாரத்துடன் வெளியாகிவரும் தற்போதைய நிலையில் இன்னமும் சிங்களச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு வதைக்கப்படும் தமிழ் உறவுகள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை அந்தச் சிறைகளிலிருநு்து வெளியே கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை அத்தியாவசியமாகியிருக்கிறது.
கடந்த மே மாத நடுப்பகுதியில் - போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய காலப்பகுதியில் - சிறிலங்கா அரச படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் கொடூரம் தாங்காமல் நிராயுதபாணிகளாகச் சரணடைந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்காப் படைகளால் நூற்றுக்கணக்கான இரகசிய வதைமுகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு விசாரணைகள் என்ற பெயரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.
முகாம்களிலிருந்து தினமும் 20 பேர் காணாமல் போகிறார்கள், வெள்ளைவானில் வந்த அடையாள தெரியாத நபர்களால் முகாமிலுள்ளவர்கள் கடத்தப்படுகிறார்கள் என்ற செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில், அந்த காணாமல் போதல்களின் பின்னணியில் ' சனல்-4' தொலைக்காட்சி வெளியிட்ட காணொளியில் காண்பிக்கப்பட்டது போன்ற சம்பவங்களே அரங்கேறிக்கொண்டிருக்கின்றன என்று சிறிலங்காவிலுள்ள மனித உரிமைகள் அமைப்பு சார்ந்த - பெயர்குறிப்பிட விரும்பாத - அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-முகிலன்
No comments:
Post a Comment